என்ன சொல்கிறார் 'சூப்பர் குயின்' பார்வதி

ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் குயின் நிகழ்ச்சியின் டைட்டில் வென்றுள்ளார் பார்வதி. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பார்வதி அளித்த பேட்டி : ''இதுவரை என்னை பவித்ரா என்ற கதையின் பாத்திரமாக மட்டுமே மக்கள் பார்த்தனர். ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான 'சூப்பர் குயின் ஷோ' வாயிலாக, நடிகை பார்வதி யார் என்பதை மக்கள் அறிந்தனர். இதனால் என்னை நானே அடையாளம் கண்டு கொண்டேன்..''

''போட்டியில் பங்கேற்ற அனைவருக்குமே ஆரோக்கியமான போட்டி மட்டுமே இருந்தது. பொறாமை யாருக்கும் இல்லை. இறுதிப்போட்டியில் ஐவரும் சிறந்ததொரு சமூக விழிப்புணர்வு கருத்தை முன் வைக்க வேண்டும் என்றனர்..''

''இங்கு 100 திருநங்கையரில் 50 பேர் உலகை எதிர்கொள்ள முடியாமல் தவறான முடிவை எடுப்பதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. இந்த சவால்களை தாண்டி, கலெக்டர் ஆன திருநங்கை குறித்த உண்மை சம்பவத்தையே நான் நாடகமாக நடித்து இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றேன்..''

''ஆண்களை போலவே பெண்களும் இன்று சாதிக்கின்றனர். சொல்லப்போனால் வீட்டையும் பார்த்துக் கொண்டு வேலைக்கும் செல்கின்றனர். பெண்களை வேலைக்கு அனுப்புங்கள் என சொல்ல வேண்டிய சூழ்நிலை இன்று இல்லை. எந்த பிரச்னையானாலும் பெண்கள் முடங்கி விடக்கூடாது எழுந்து வர வேண்டும்..''

''என் குடும்பத்தில் சினிமாவில் யாரும் இல்லை. வேலைவாய்ப்பை தேடி வந்த எனக்கு நடிக்கவும் தொடர்ந்து சூப்பர் குயின் ஷோ வாய்ப்பும் கிடைத்தது. எதுவுமே திட்டமிட்டு நடக்கவில்லை. சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்..''

இவ்வாறு பார்வதி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.