கருணை உள்ளம் கொண்டவர் தனது தந்தை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்..!

டெல்லி: கருணை உள்ளம் கொண்டவர் தனது தந்தை என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கு வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி மறைந்து 31ம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா, பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர்.இதனிடையே இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவரது தந்தை ராஜீவ் காந்தி குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். கருணை உள்ளம் கொண்டவர் தனது தந்தை. தந்தை ராஜீவ் காந்தி இரக்கமுள்ள, கனிவான மனிதராக திகழ்ந்தார். எனக்கும் பிரியங்காவுக்கும் மன்னிக்கும் குணத்தை கற்பித்த சிறந்த தந்தையாக ராஜீவ் காந்தி இருந்தார் என உருக்கமாக தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் எதிர்க்கும் நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.