காதலித்த பெண் வேறு நபருக்கு நிச்சயம் – ஆத்திரத்தில் காதலன் கத்திக்குத்து

தான் காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்ததால் ஆத்திரமடைந்த காதலன், புதுமாப்பிள்ளை உட்பட 5 பேரை கத்தியால் குத்திய சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிமணி (24). இவரும், சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையைச் சேர்ந்த பிரியதர்ஷனியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு பிரியதர்ஷனியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பிரியதர்ஷினியை நெற்குப்பையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் முடிவு செய்து நிச்சயம் செய்தனர்.
image
இந்நிலையில், பிரியதர்ஷினியும், பாலமுருகனும் நேற்று இரவு வேந்தன்பட்டியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் திருமணத்திற்காக பத்திரிகை மற்றும் டிஜிட்டல் பேனர் வைப்பதற்காக புகைப்படம் எடுக்க வந்துள்ளனர். பாலமுருகனின் நண்பர்களும் அவர்களுடன் வந்துள்ளனர். அப்போது, பிரியதர்ஷினியின் காதலன் பாண்டி மணி, அவரது சகோதரர் மற்றும் நண்பர்கள் அங்கு வந்து பிரியதர்ஷினி மற்றும் பாலமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டி மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக குத்தியுள்ளார்.
image
இதில் அவர்கள் படுகாயமடைந்தனர் காயமடைந்த 3 பேர் பொன்னமராவதி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையிலும், இரண்டு பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பொன்னமராவதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பாண்டிமணி மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.