புதுடில்லி : ‘விசா’ மோசடி வழக்கில்,காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதாக இருந்தால், அவருக்கு மூன்று நாட்களுக்கு முன் ‘நோட்டீஸ்’ அனுப்ப, சி.பி.ஐ.,க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தந்ததாக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, கார்த்தி சிதம்பரம், அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் ஆகியோருக்குசொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இந்த வழக்கில்ஆடிட்டர் பாஸ்கர் ராமனை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இந்த வழக்கில் தானும் கைது செய்யப்படுவதை தவிர்க்க, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி, கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.
இது, நீதிபதி நாக்பால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ”கார்த்தி சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அவரை கைது செய்வதாக இருந்தால், அது பற்றி, அவருக்கு ௪௮ மணி நேரத்துக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்படும்,” என்றார்.இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டதாவது:கார்த்தியை கைது செய்ய வேண்டும் என்றால், மூன்று நாட்களுக்கு முன், சி.பி.ஐ., அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வெளிநாட்டில் இருக்கும் கார்த்தி, நாடு திரும்பிய 16 மணி நேரத்திற்குள், விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement