“பொறுப்பை உணர்ந்து பணியாற்றுங்கள்; இனி டிஎன்பிஎஸ்சி மூலம்தான் பணி” – அமைச்சர் பேச்சும் பின்னணியும்!

ஆய்வு நடத்தும் அமைச்சர்:

சமீப காலமாகத் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பல்வேறு பணிமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திவருகிறார். ஆய்வுக்குச் செல்லும்போது, அந்த பணிமனையில் மூன்று மாதங்களில் நீண்ட விடுப்பு எடுத்துள்ளவர்களை அழைத்து பேசுகிறார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ்.எஸ்.சிவசங்கர்

மேலும், போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் 15 விதமான படிகளை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் ஆய்வுக்குச் செல்லும்போது தொழிலாளர்களிடம் கண்டிக்கும் விதமாகப் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொழிலாளர்கள் ஒத்துழைப்பு அவசியம்:

சமீபத்தில் அமைச்சர் பெரம்பூர், அயனாவரம், அடையாறு, திருவான்மியூர் போன்ற பணிமனைகளில் ஆய்வு நடத்தினர். அங்குள்ள ஊழியர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய அவர், “பொதுமக்களிடம் இருந்து வரும் மனுக்களில் பெரும்பாலான மனு வேலை கோரியே வருகின்றது. சூழல் இப்படி இருக்கும்போது, கையில் வேலையை வைத்துக்கொண்டு பணியாளர்கள் பணிக்கு வராமல் இருப்பது நிர்வாகத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை அவர்கள் உணரவேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கான காலி பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி. மூலமாகத்தான் நிரப்பப்படும். தனிப்பட்ட யாருக்கும் வேலை வழங்குவது சாத்தியம் கிடையாது. நீண்ட நாளாக பணிக்கு வராத ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பது தான் வழக்கம்.

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

ஆனால், பணிக்கு வராதவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் 48,500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிவருகிறது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு வந்து அனைத்து பேருந்துகளையும் இயக்கி உதவ வேண்டும். இலவச கட்டணத்தில் பேருந்தில் பயணிக்கும் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். பணியாளர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பது அவர்களின் ஓய்வுக் காலத்தைப் பாதிக்கும். பிரதிநிதிகள் தங்களின் கோரிக்கையைத் தெரிவித்தால் அதற்கான நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்துக் கழகம் சிறப்பாகச் செயல்பட அனைவரது ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்” என்று பேசியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி.யூ பொதுச்செயலாளர் ஆறுமுக நயினாரிடம் பேசினோம். “ கடந்த 2012-ம் ஆண்டுக்கு முன்புவரை வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்தவர்களின் முன்னுரிமை அடிப்படையில்தான் பணிக்கு ஆள்கள் சேர்க்கை நடைபெற்றது. உச்ச நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு காரணமாக, வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்தவர்கள் மற்றும் நேர்காணல் முறையில் கலந்து ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை அடுத்து 2013-ம் ஆண்டிலிருந்து பணிக்கு ஆள் சேர்ப்பதில் பணம் அதிக அளவில் விளையாட ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் முடிவில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம்தான் ஆள்சேர்க்கை நடத்தப்படவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆறுமுக நயினார்

இந்த உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் ஒரு மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், துறையில் ஆள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது உடனடியாக ஆள்சேர்க்கை நடத்தவேண்டும் என்றும், இந்த ஒருமுறை தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அம்முறை ஆள் சேர்ப்பதில் பெருமளவு பணம் கரைபுரண்டு ஓடியது. அதற்குப் பின்பாக போக்குவரத்துத் துறையில் இதுவரை ஆள்சேர்க்கை நடைபெறவே இல்லை. தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. அந்த இடங்கள் இன்றளவும் நிரப்பப்படவில்லை. இம்முறை டி.என்.பி.எஸ்.சி. மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேர்வின் மூலம் ஆள் சேர்ப்பதில் தவறு ஏதும் கிடையாது. ஆனால் அவசரமாக பணியமர்த்தவேண்டிய பணிகளுக்கு முன்பே தேர்வு நடத்தி ஆள்களைத் தேர்வு செய்துவைத்திருந்தால் பரவாயில்லை. இனிமேல் தேர்வு நடத்தி ஆள்களை எடுப்பதில் தாமதம் ஏற்படும். அதைத் தவிர்ப்பதற்கான முயற்சியை அரசு செய்யவேண்டும். அதேபோல, நடத்துநர், டெக்னீசியன், மெக்கானிக் தேர்வு மூலம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஓட்டுநர் பணியைப் பொறுத்தவரை அவர்களின் வாகனம் ஓட்டும் திறமையும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அதற்குத் தேவையான வழிமுறைகளை அரசு உருவாக்கவேண்டும். தற்போது போக்குவரத்து துறையில் கடுமையான ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனைச் சரிசெய்ய விரைந்து அரசு முன்வரவேண்டும்.

அரசு போக்குவரத்து கழகம்

இலவச மகளிர் பேருந்துகளில் பணிக்குச் செல்லும் ஓட்டுநர் நடத்துநருக்குப் பேட்டா கொடுப்பது கிடையாது. இந்த காரணத்தினால் தான் பலரும் அந்த பேருந்துகளில் பணிக்குச் செல்ல ஆர்வம் கட்டுவது கிடையாது. மற்ற பேருந்துகளைப் போல அந்த பேருந்திலும் பேட்டா வழங்க அரசு முன்வரவேண்டும். பணிமனைகளுக்குச் சென்று அமைச்சர் ஆய்வு மேற்கொள்வது மிகவும் வரவேற்கத்தக்கச் செயல்தான். தொழிலாளர்களை அமைச்சர் மிரட்டுவது போல் எல்லாம் எனக்குத் தெரியவில்லை. தகுந்த அறிவுரைகளைத்தான் வழங்கிவருகிறார். அதே சமயத்தில், ஒரு தொழிலாளர் ஏன் பணிக்கு வரவில்லை என்ற காரணத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்குவதுபோல, துறைசார் அதிகாரிகளுக்கும் தகுந்த அறிவுரையை வழங்கினால் பணிகள் நன்றாக நடக்கும்” என்று பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.