இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், அதிமுக -பாஜக நிர்வாகிகள் மாறி மாறி ஒருவரை விமர்சித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. கூட்டணி அரசியல் என்பதையும் தாண்டி, தேசிய அளவிலான பிரச்சினைகளில் பாஜகவோடு அதிமுக நிற்கிறது.
பொன்னையன் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி கே பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் அதிமுக குறித்து தனிப்பட்ட கருத்துக்களை யாரும் கூற கூடாது என்று எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.
வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 400 தொகுதிகளை கைப்பற்றி மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பிரதமர் ஆவார். அதற்காகத்தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுகவை அழித்து பாஜக வளர வேண்டிய எந்த அவசியமும் இல்லை. தேசியத்திற்கு ஆதரவாளர்களும், திராவிட மாடல் என்ற ஏமாற்று வித்தையை நம்பாதவர்கள் தமிழகத்தில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.
மேகதாது அணை கட்டியே தீரவேண்டும் என்று கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினார்கள். அந்நேரம் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அதனை கண்டிக்கவில்லை என்பதனை இந்த இடத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று அண்ணாமலை அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.