முன்னாள் பீகார் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீது மாட்டு தீவன ஊழல் தொடர்பான வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மொத்தம் ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இது லாலு பிரசாத் யாதவ்-க்கு எதிரான ஐந்தாவது வழக்கு. தும்கா, தியோகர் மற்றும் சாய்பாசா கருவூலங்கள் தொடர்பான நான்கு வழக்குகளில் அவர் முன்பு ஜாமீன் பெற்றிருந்தார். ஜாமீன் பெற்றதிலிருந்து அரசியல் விவகாரங்களிலிருந்து விலகியிருந்த அவர் நேற்று சம்பூர்ண கிராந்தி திவாஸ் என்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, “பாஜக செயல்படும் விதத்தில், நாடு உள்நாட்டுப் போரை நோக்கி நகர்கிறது. நாட்டில் நிலவும் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், ஊழல் போன்றவற்றுக்கு எதிராக ஒன்றுபடுமாறு மக்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். நாம் ஒற்றுமையாகப் போராடி வெற்றி பெறுவோம். அதிலிருந்து பின்வாங்கமாட்டோம்” என்று பேசினார்.
அதைத் தொடர்ந்து அவரது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தி அதோடு ஒரு வீடியோவையும் பதிவு செய்திருந்தார். அதில், “48 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் மாணவர் தலைவர்களாக இருந்த நாங்கள் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடினோம், இப்போதும் போராடுகிறோம். நாங்கள் சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகார அமைப்புக்கு எதிர்த்துப் போராடப் பிறந்தவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.