திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சோழவரம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்நாதன். இவர் தனது நண்பரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கி கொண்டு எர்ணாமங்கலம் கிராமத்தில் உள்ள மாமா சுப்பிரமணியனை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது பூவாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வானம் பட்டு கிராமத்திலிருந்து வந்து கொண்டு இருக்கும் போது சோழபுரம் கூட்ரோடு அருகே, இரண்டு இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அருள்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்த 3 பேரையும் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கலசபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.