தாம்பரம்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் மனித குரங்கிற்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
தாம்பரம் அடுத்த வண்டலுார் உயிரியல் பூங்காவில் 2,300-க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளன. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மூன்று மாவட்ட மக்களுக்கும் பிரதான சுற்றுலா தலமாக இது செயல்பட்டு வருகிறது.
இப்பூங்காவில் கோம்பி (29) என்ற ஆண் மனித குரங்கும், கவுரி (23) என்ற பெண் மனித குரங்கும் உள்ளன. 16 ஆண்டுகளுக்கு முன்பு குட்டி ஈன்ற இந்தக் குரங்குகள் அதன்பின் குட்டி இடவில்லை.
கடந்த ஆண்டு இந்த இரண்டு மனித குரங்குகளுக்கும் ஆண் குட்டி ஒன்று பிறந்தது. அதற்கு ஆதித்யா என பெயர் சூட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆதித்யா பிறந்து ஓராண்டு நிறைவடைந்ததால் பூங்காவிற்கு வந்த பார்வையாளர்கள் முன்னிலையில் பழங்களால் செய்யப்பட்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. வெட்டிய கேக்கை பார்வையாளர்கள் மற்றும் விலங்குகள் பராமரிப்பாளர்கள் குரங்குகளை நோக்கி வீசினர். அவற்றை அழகாக கவ்விப் பிடித்த குரங்குகள் தங்களுக்குள் பகிர்ந்து சாப்பிட்டன.