காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணிக்கு நிகாத், லவ்லினா தேர்வு..!

புதுடெல்லி,

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி டெல்லியில் நடந்தது.

இதில் 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியனான நிகாத் ஜரீன் 7-0 என்ற கணக்கில் அரியானாவின் மீனாட்சியை தோற்கடித்து முதலிடம் பிடித்து அணியில் தனது இடத்தை சொந்தமாக்கினார். 70 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான லவ்லினா போர்கோஹைன் 7-0 என்ற கணக்கில் ரெயில்வே வீராங்கனை பூஜாவை விரட்டியடித்து தனது இடத்தை உறுதி செய்தார்.

முன்னதாக 48 கிலோ பிரிவின் நடப்பு சாம்பியனான மேரிகோம் தகுதி சுற்றின் போது கால்முட்டியில் காயமடைந்து பாதியில் வெளியேறியதால் அவருக்கு மீண்டும் காமன்வெல்த் போட்டியில் களம் காணும் வாய்ப்பு பறிபோனது. காமன்வெல்த் விளையாட்டுக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணி வருமாறு:-

நிது (48 கிலோ), நிகாத் ஜரீன் (50 கிலோ), ஜாஸ்மின் (60 கிலோ), லவ்லினா (70 கிலோ).


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.