தருமபுரி தேர் திருவிழாவின்போது சப்பரம் கவிழ்ந்த விபத்து – முதலமைச்சர் ஸ்டாலின் நிதிஉதவி அறிவிப்பு.!

தருமபுரி மாவட்டத்தில் தேர் திருவிழாவின்போது சப்பரம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே அமைந்துள்ள மாதேஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற கோவில் தேர் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். 

அவர்களில் அப்பகுதியினைச் சேர்ந்த திரு.மனோகரன் ( வயது 57 ) மற்றும் திரு.சரவணன் ( வயது 50 ) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த நான்கு நபர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.