கேரளாவில் இன்று 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக கண்ணூர், காசர்கோடு கோழிக்கோடு உள்பட பெரும்பாலான வட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தென் மாவட்டங்களான திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா தவிர ஏனைய 11 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நேற்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று கண்ணூர், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.