திருப்பூரில் பள்ளி மாணவர்கள் கற்களை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் குமார் நகர் பிஷப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் திருப்பூர் ரயில் நிலையம் அருகே பேருந்து நிறுத்தத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சண்டை நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், இன்று பிஷப் பள்ளி மாணவர்களும் நஞ்சப்பா பள்ளி மாணவர்களும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதனைக் கண்ட நபர் ஒருவர் மாணவர்களை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தடுக்க முயன்றவரையும் அவருடன் வந்த நபர்களையும் நஞ்சப்பா பள்ளி மாணவர்கள் துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர்.
சிறிது தூரம் ஓடிய நபர்கள், அந்த பகுதியில் இருந்த கட்டைகளை எடுத்து மாணவர்களை தாக்கியுள்ளனர். இதையடுத்து தகவலறிந்து விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் மாணவர்களில் சிலரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை அந்த பகுதியில் இருந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM