கீவ்,
உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் கிழக்கு உக்ரைன் தற்போது ரஷிய படைகளின் பிரதான இலக்காக உள்ளது. அதே சமயம் ரஷிய படைகளின் முழு கவனமும் கிழக்கு உக்ரைன் மீது இருந்தாலும் உக்ரைனின் பிறபகுதிகளில் தாக்குதல் நடத்துவதை ரஷியா நிறுத்திவிடவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக உக்ரைன் முழுவதும் உள்ள வணிக வளாகம், வர்த்தக மையம், அடுக்குமாடி குடியிருப்பு என பொது உள்கட்டமைப்புகள் மீது ரஷிய படைகள் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டினிப்ரோ நகரில் விண்வெளி ராக்கெட்டுகளை உற்பத்தி செய்யும் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
அதே போல் ரஷிய எல்லைக்கு அருகே அமைந்துள்ள வடக்கு சுஹூயிவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு, பள்ளிக்கூடம் மற்றும் அரசு அலுவலகம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 3 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.