முதலீட்டாளர்களை கலங்கடித்த ராஜினாமா…? ஏன் அப்படி செய்தார் அவர்?

ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரியாக இருந்த பிரசாந்த் ஜெயின் அந்தப் பதவியைத் திடீரென்று ராஜினாமா செய்திருப்பது முதலீட்டாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன ஆச்சு பிரசாந்த் ஜெயினுக்கு? ஏன் இந்த திடீர் ராஜினாமா?

ஸ்டார் மேனேஜர்…

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு உலகில் ஸ்டார் மேனேஜராக விளங்கியவர் பிரசாந்த் ஜெயின். இவர் பின்பற்றி வந்த வேல்யூ இன்வெஸ்ட்டிங் முறை மிகப் பெரிய லாபத்தை முதலீட்டாளர்களுக்குத் தந்ததுடன், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு மிகப் பெரிய அளவில் உயர்வதற்குக் காரணமாக இருந்தவர்.

மியூச்சுவல் ஃபண்ட்

ஐ.ஐ.டி + ஐ.ஐ.எம்….

பிரசாந்த் ஜெயின் கான்பூரில் இருக்கும் ஐ.ஐ.டி.யில் என்ஜினியரிங் படித்தார். அதன்பிறகு பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம்-ல் எம்.பி.ஏ படித்தார். ஐ.ஐ.எம்-ல் நிதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் கற்றறிந்து ஒரு தேர்ந்த நிதி நிபுணராக வெளியே வந்தார் பிரசாந்த் ஜெயின்.

எஸ்.பி.ஐ.யில் முதல் பணி…

படித்து முடித்தவுடன் எஸ்.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன்பிறகு 20th century என்கிற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பிற்பாடு இந்த நிறுவனத்தை ஜூரிச் நிறுவனம் வாங்கியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிறுவனத்தை ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வாங்கியது. நிறுவனங்கள் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு சென்றாலும் பிரசாந்த் ஜெயின் மட்டும் நிறுவனத்தை விட்டு மாறவே இல்லை.

வெற்றிகரமாக 3 ஃபண்டுகள்…

ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தில் மூன்று முக்கியமான ஃபண்டுகளை வெற்றிகரமாக நிர்வாகம் செய்தார் பிரசாந்த். ஹெச்.டி.எஃப்.சி பேலந்ஸ்ட் அட்வாண்டேஜ் ஃபண்டில் ரூ.43,078 கோடியை நிர்வாகம் செய்தார். இந்த ஃபண்ட் கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுதோறும் 11.3% வருமானத்தைத் தந்துள்ளது. ஆனால், இந்த ஃபண்டை பிரசாந்த் ஜெயின் தலைமை ஏற்று நடத்தத் தொடங்கிய பிறகு ஆண்டுதோறும் 17.88% வருமானம் தந்தது குறிப்பிடத்தக்கது.

மியூச்சுவல் ஃபண்ட்

அதாவது, இந்த ஃபண்டில் 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அது இன்றைக்கு ரூ.4,98,227-ஆக அதிகரித்திருக்கும். இந்த அளவுக்கான அதிக லாபத்தை இந்த கேட்டகிரியில் உள்ளம் மற்ற ஃபண்டுகள் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெச்.டி.எஃப்.ஐ டாப் 100 என்கிற லார்ஜ் கேப் ஃபண்டையும் பிரசாந்த் ஜெயின் நிர்வகித்து வந்தார். இந்த ஃபண்டில் மட்டும் ரூ.19,910 கோடியை அவர் நிர்வகித்து வந்தார். இந்த ஃபண்ட் கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுதோறும் 11.9% லாபம் தந்திருக்கிறது. இந்த கேட்டகிரியில் உள்ள மற்ற பங்குகள் வெறும் 9.5% லாபத்தையே தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக, ஹெச்.டி.எஃப்.சி ஃபிளெக்ஸிகேப் என்கிற ஃபண்டில் ரூ.26,511 கோடியை அவர் நிர்வாகம் செய்து வந்தார். இந்த ஃபண்ட் கடந்த 15 ஆண்டுகளில் 12.6% லாபம் தந்துள்ளது. இந்த கேட்டகிரியில் பிற ஃபண்டுகள் தந்த லாபம் வெறும் 11% மட்டுமே.

ரூ.1 லட்சம் கோடிக்கு மேல்…

ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரூ.4.15 லட்சம் கோடிக்குமேல் நிர்வாகம் செய்து மூன்றாவது மிகப் பெரிய ஃபண்ட் நிறுவனமாக இருக்கிறது. ஆனால், பிரசாந்த் ஜெயின் மட்டுமே ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் நிர்வாகம் செய்திருக்கிறார். மிக சிலரே இந்த அளவுக்கு அதிகமான தொகையை நிர்வாகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் ஜெயின்

இரண்டு வருடமாகவே…

கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே அவர் ராஜினாமா செய்வார் என்கிற வதந்திகள் வந்துகொண்டிருந்தன. ஆனால், ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி.யின் சந்தையை அதிகரிக்க அந்த நிறுவனம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் இந்த சமயத்தில் அவர் ராஜினாமா செய்திருப்பது ஆச்சரியம் தந்துள்ளது. இந்த நிறுவனப் பங்கு விலை கடந்த ஓராண்டு காலத்தில் 34% இறக்கம் கண்டுள்ளது.

இனி என்ன செய்வார்?

ஹெச்.டி.எஃப்.சி ஃபண்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிரசாந்த் ஜெயின் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. அவர் இன்னொரு ஃபண்ட் நிறுவனத்தில் சேருவாரா அல்லது சொந்தமாக ஒரு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்குவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.