ஓடிடி வெளியீடு : தெலுங்கு தயாரிப்பாளர்கள் புது முடிவு

தெலுங்குத் திரையுலகத்தில் வெளியாகும் புதிய படங்களை ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான கால அளவை மாற்றி அமைத்துள்ளது தெலுங்கு திரைப்பட சேம்பர் ஆப் காமர்ஸ். அதன் கூட்டம் நேற்று விஜயவாடாவில் நடைபெற்றது. அப்போது ஓடிடி வெளியீடுகள், டிக்கெட் கட்டண விவகாரம், விபிஎப் கட்டணம், தயாரிப்பு செலவு உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் தியேட்டர்காரர்கள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், புதிய படங்களின் உடனடி ஓடிடி வெளியீடு காரணமாக தியேட்டர்களுக்கு மக்கள் வருகை குறைந்துள்ளதாகவும் கூட்டத்தில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் புதிய நிபந்தனைகளை கூட்ட முடிவில் எடுத்துள்ளனர்.

பெரிய பட்ஜெட் படங்களை 8 வாரங்களுக்குப் பிறகும், சிறிய பட்ஜெட் படங்களை நான்கு வாரங்களுக்குப் பிறகும் ஓடிடி தளத்தில் வெளியிடலாம் என்ற ஆலோசனையை தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பியுள்ளார்களாம்.

மேலும், போலியான வசூல் விவரங்களை சில முன்னணி நடிகர்கள் வெளியிடுவது குறித்தும் கூட்டத்தில் விவாதித்துள்ளார்கள். அதன் மூலம் நடிகர்கள் தங்களது சம்பளத்தை உயர்த்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.