ஹைதராபாத்: கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குரங்கு அம்மை நோய் ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பரவியது. இந்நிலையில், கேரளாவில் இந்நோயால் இதுவரை 3 பேர் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே 4-வதாக தற்போது டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரும் அங்குள்ள லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தற்போது குவைத்திலிருந்து ஹைதராபாத் வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவரின் ரத்த மாதிரிகள் புணே வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஹைதராபாத் ஃபீவர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சங்கர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 6-ம் தேதி, குவைத்தில் இருந்து ஹைதராபாத் வந்த நபருக்கு திடீரென உடலில் பல இடங்களில் சிறு கொப்பளங்கள் வந்ததால் அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், இது குரங்கு அம்மையாக இருக்குமோ எனும் சந்தேகத்தால், ஃபீவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாங்கள் அவரின் ரத்த மாதிரியை எடுத்துபுணேவுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
90 சதவீதம் இது குரங்கு அம்மை என கூறலாம். ஆதலால், இவருடன் தொடர்பில் இருந்த மேலும் 6 பேரையும் அழைத்து வந்து, தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். இவர்களின் ரத்த மாதிரியையும் புணேவுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.