மிராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த்குமார் பாக்மர். இவர் கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் தன் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் குழந்தைகள் இருவரும் கொடிசியா சாலையில் உள்ள RAK’S பள்ளிக்கூடம் என்கிற ஐ.சி.எஸ்.இ தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
மகன் எத்தன் பாக்மர் 5-ம் வகுப்பு படிக்க, மகள் குஷி பாக்மர் 3-ம் வகுப்புப் படித்து வருகிறார். கடந்த 22-ம் தேதி குழந்தைகள் இருவரும் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றிருக்கின்றனர்.
இதனிடையே அன்றைய தினம் மதியம் பள்ளி நிர்வாகத்திடமிருந்து ஹேமந்த்குமாருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அப்போது, “மதிய உணவு இடைவெளியின்போது குஷி மற்ற குழந்தைகளுடன் புட்பால் கிரவுண்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.
குழந்தைகள் கோல் போஸ்டை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும்போது, அது அப்படியே சாய்ந்து குஷிக்கு தலையில் அடிபட்டுவிட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். உடனடியாக அங்கு வரவும்” என்று கூறியிருக்கின்றனர்.
பின்பக்க மூளையில் ரத்தக் கசிவு காரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள குஷிக்கு இன்னும் சுயநினைவு வரவில்லை. இதையடுத்து குழந்தையைப் பாதுகாக்காமல் அஜாக்கிரதையாக இருந்ததால் பள்ளி நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்குமாறு பீளமேடு காவல்நிலையத்தில் ஹேமந்த் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் பள்ளி தாளாளர் ஸ்வேதா கிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆசிரியர் ரூடால்ப் மற்றும் ஆசிரியர்கள் அமரீஸ்வரி, சீனிவாசன், பரத் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவுசெய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.