ஏப்ரல் 2024 உலகின் அதிக வெப்பமான மாதம்: ஐரோப்பிய ஒன்றிய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாரிஸ்: சர்வதேச கடல் மற்றும் புவி மேற்பரப்பு வெப்ப சராசரி ஏப்ரல் 2024-ல் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகின் பெரும்பாலான பகுதிகளில் எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் உலகில் அதிக வெப்பம் பதிவான மாதமாக இந்த ஏப்ரல் மாதமாக இருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்நினோ தாக்கம் படிப்படையாக வலுவிழந்து வரும் சூழலில் அதன் இறுதிக்கட்ட தாக்கத்தால் வெப்பம் கடுமையாக அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அதீத வறட்சி, பருவம் தவறிய மழை, வெள்ளம், சூறாவளிக்கள் போன்றவை இந்தத் தாக்கத்தால் நீடிக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.

எல் நினோ என்பது உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு. பசிபிக் கடல்பரப்பு வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அதாவது, 7 முதல் 24 மாதங்கள் வரை அதிகமாக்கும் நிகழ்வு தான் இந்த ‘எல் நினோ’. இந்த எல் நினோ எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதீத மழை பெய்வதோ அல்லது கடுமையான வறட்சி ஏற்படுவதோ நிர்ணயமாகும். ஏப்ரல் 2024 வரை எல் நினோவின் தாக்கம் இருக்கும் என ஏற்கெனவே வானிலை ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். இந்நிலையில் தற்போது எல் நினோ படிப்படியாக வலுவிழந்து வருவதாகவும் அதேவேளையில் அது தனது இறுதித் தாக்கத்தை முழு வீச்சில் காட்டிக் கொண்டிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும்.. இதன் விளைவாக கடந்த ஜூன் மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமுமே சர்வதேச வெப்ப சராசரி புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 2024-ல் தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய சர்வதேச புவி மேற்பரப்பு வெப்ப சராசரியைவிட உயர்ந்து 1.58 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

கடந்த 2015 / 2016 காலகட்டத்தில் இதேபோல் ஒவ்வொரு மாதமும் அசாதரணமான வெப்பநிலை பதிவாகியது.
கடந்த 12 மாத வெப்பநிலை சராசரி 1.6 டிகிரி செல்சியஸ் என்று பதிவாகியுள்ளது. இது 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் மிகாமல் தடுக்க வேண்டும் என்ற இலக்கை இது மிஞ்சிவிட்டது.

மேலும் கடந்த மார்ச் மாதம் தான் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றில் இரண்டாவது வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது. இவையனைத்தும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் இன்னும் அழுத்தமாக செயல்பட வேண்டியதையே உணர்த்துகிறது.

‘பாரிஸ் உடன்படிக்கை’.. கடந்த 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் கூடிய ஐ.நா. காலநிலை மாநாட்டில் (COP21) ‘பாரிஸ் உடன்படிக்கை’ (Paris Agreement) உலகின் 195 நாடுகளால் ஒருமனதாக ஏற்கப்பட்டது.

நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட படிம எரிபொருட்களை மிதமிஞ்சி பயன்படுத்தியதாலும், காடுகளை அழித்ததாலும் வளிமண்டலத்தில் மாசுக்காற்றின் அடர்த்தி அதிகமாகி, பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துச் செல்கிறது. இதனால் பெருவெள்ளம், அதிவேக சூறாவளி, பெரும் வறட்சி, நோய்கள் அதிகரிப்பு, வேளாண்மை பாதிப்பு, கடல்வள அழிவு என எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

14 டிகிரி செல்சியசாக இருந்த புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் விளைவாகத்தான் இவ்வளவு பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில், அதை 2 டிகிரி செல்சியஸ், அதாவது 16 டிகிரி என்ற அளவுக்கு செல்லவிடாமல் குறைக்க உறுதி ஏற்கப்பட்டிருக்கிறது. முடிந்தால் இதை 1.5 டிகிரி செல்சியசுக்குள், அதாவது 15.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த முயற்சி செய்வது என்றும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 2024-ல் தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய சர்வதேச புவி மேற்பரப்பு வெப்ப சராசரியைவிட உயர்ந்து 1.58 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.