இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்களுக்கு சீனா எச்சரிக்கை

பீஜிங்,

இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் பொருளாதார கொள்கைகள், வரிக்குறைப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் வேறுபட்ட கருத்துகளை கொண்டிருந்தாலும், சீனாவை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என இருவரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதுமட்டும் இன்றி, பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் சீனாவுடான உறவில் கண்டிப்புடன் இருப்பேன் என்றும், இங்கிலாந்தின் தொழில்நுட்பங்களை சீனா திருடுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் இருவரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சீனாவை ஒரு அச்சுறுத்தலாக முன்னிறுத்தி பிரசாரம் செய்வதை நிறுத்தும்படி இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்கள் இருவரையும் சீனா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், “சில இங்கிலாந்து அரசியல்வாதிகளுக்கு நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சொந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாத நீங்கள் சீனாவை அச்சுறுத்தல் என்று அழைப்பது உள்பட சீனாவை பற்றி பொறுப்பற்ற கருத்துகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.