படிப்பதற்காக பெற்றோரை சிரமப்படுத்தி விட்டேன் – கடிதம் எழுதிவிட்டு மாணவி எடுத்த சோக முடிவு

களக்காடு அருகே கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக பெற்றோரை சிரமப்படுத்தி விட்டேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி ராஜலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (53). தொழிலாளி இவருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
இந்நிலையில், இவரது மகள் பாப்பா (18) பொன்னாக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளார். இதற்கான கட்டணமாக ரூ.12 ஆயிரத்தை முத்துக்குமார் இரண்டு தவனைகளாக செலுத்தியுள்ளார்.
image
கூலித் தொழிலாளி என்பதால் குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி தவித்த இவர், தனது மகளின் படிப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து செலுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது படிப்பு செலவுக்காக பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு பணம் செலுத்தியதை எண்ணி மாணவி பாப்பா மன வேதனை இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று மாலை முத்துக்குமார் தனது மனைவியுடன் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது, வீட்டு கதவை உள்புறமாக பூட்டி விட்டு துப்பட்டாவால் பாப்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த முத்துக்குமாரும் அவரது மனைவியும் கதவை குச்சியால் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
image
இதையடுத்து களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பாப்பாவின் கைப்பையை சோதனையிட்ட போது அவர், தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், அவர் தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.