அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நேற்று நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை 75 புள்ளிகள் வரை உயர்த்தியதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சில பொருளாதார ஆய்வாளர்கள் அமெரிக்க பெடரல் வங்கி 75 முதல் 100 புள்ளிகள் வரை வட்டியை உயர்த்தும் என்று ஏற்கனவே கணித்து இருந்தனர்.
இந்த நிலையில் அமெரிக்கப் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என பொருளாதார வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பணவீக்கம் அதிகரிப்பு
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத வகையில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த ஜூன் மாதத்தில் 9 சதவீதம் அதிகமாக பணவீக்கம் உயர்ந்ததால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கப் பெடரல் வங்கி வட்டியை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என பொருளாதார வல்லுனர்கள் கூறிவந்தனர்.
வட்டி விகிதம் உயர்வு
ஏற்கனவே இரண்டு முறை அமெரிக்க பெடரல் வங்கி சமீபத்தில் வட்டியை உயர்த்திய நிலையில் தற்போது மூன்றாவது முறையாக 75 புள்ளிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் கடனுக்கான வட்டி சதவீதம் உயரலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச்சந்தையில் மாற்றம்?
பெடரல் வங்கியின் வட்டி விகித அறிவிப்பு காரணமாக இன்றைய ஐரோப்பா நாடுகளின் பங்குச்சந்தை, ஆசிய பங்குச் சந்தை மற்றும் தங்கம் விலையில் பெரும் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் போர்
அமெரிக்காவில் பண வீக்கத்திற்கு முக்கிய காரணம் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் என்று கூறப்படுகிறது. இந்த போர் காரணமாக அமெரிக்காவுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பொருட்களின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
சீனா
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதும் அமெரிக்காவின் பணவீக்கத்திற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் சந்திக்காத பணவீக்கத்தை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு பாதிப்பா?
இந்தியாவைப் பொருத்தவரை அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி உயர்வு காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் பெருமளவு வெளியேறி இருக்கும் நிலையில் மேலும் வெளியேற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் மதிப்பு
இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் தங்கள் கவனத்தை டாலருக்கு திருப்ப வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வது குறையும் என்றும் அதனால்தான் வரும் நாட்களில் தங்கத்தின் விலையிலும் பெரும் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Federal Reserve officials raised interest rates by 75 basis points for the second straight month!
Federal Reserve officials raised interest rates by 75 basis points for the second straight month! | அமெரி்க்க பெடரல் வங்கி வட்டி விகிதம் 75 புள்ளிகள் உயர்வு.. இந்தியாவுக்கு பாதிப்பு வருமா?