கேரள சிஎஸ்ஐ பிஷப் விசாரணைக்கு ஆஜர்

திருவனந்தபுரம்: குமரி மாவட்ட எல்லையில் உள்ள காரக்கோணத்தில் சிஎஸ்ஐ சபைக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி உள்ளது. இதில், மாணவர்களிடம் இருந்து பல கோடி நன்கொடை வசூலித்ததாக சிஎஸ்ஐ பிஷப் ரசாலம் தர்மராஜ், கல்லூரி இயக்குனர் பென்னட் ஆபிரகாம், சிஎஸ்ஐ சபை செயலாளர் பிரவீன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பிஷப் ரசாலம் தர்மராஜ் உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், யாரும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள பிஷப் ரசாலம் தர்மராஜின் வீடு, அலுவலகம், பிரவீன், பென்னட் ஆபிரகாம் ஆகியோரின் வீடுகளில் கொச்சி அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், லண்டன் செல்ல இருந்த பிஷப் தர்மராஜுக்கு தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி லண்டன் செல்வதற்காக சென்ற அவரை திருவனந்தபுரம் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து, வீட்டுக்கு திருப்பி அனுப்பினர். இந்நிலையில், நேற்று காலை கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிஷப் தர்மராஜ் நேரில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.