சென்னை: ஐஎன்எஸ் அடையாறு தளத்தில் இருந்து சாலை வழியாக செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் தொடக்க விழா நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. விழாவை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படைத் தளத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கத்திற்குச் சென்றார்.
அரங்கில் நடைபெற்று வரும் தொடக்க விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக, மேடையில் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வீரர், வீராங்கனைகளின் அணி வகுப்பு நடைபெற்றது. 186 நாடுகளைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களின் நாட்டு கொடியுடன் அணிவகுப்பு வந்தனர்.
“ஒருவன் ஒருவன் முதலாளி” உள்ளிட்ட பல தமிழ்ப் பாடல்களின் இசை பின்னணியில் ஒலிக்க அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடுகளின் பெயர் பலகை அடங்கிய பதாகைகளை தமிழகம் முழுவதும் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற 186 அரசுப் பள்ளி மாணவர்கள் ஏந்தி அணிவகுப்பு வந்தனர்.
தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக லிடியன் நாதஸ்வரம் கண்ணைக் கட்டிக்கொண்டு பியானோ வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரலை இங்கே…