இனிமேல் 45 நாட்கள் கிடையாது; மக்களின் புகாருக்கு 30 நாட்களில் தீர்வு: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: இணையதளம் மூலமாக மக்கள் அளிக்கும்  புகார்கள் மீது தீர்வு காண்பதற்கான அவகாசம் 45 நாட்களில் இருந்து 30 நாட்களாக ஒன்றிய அரசு குறைத்துள்ளது. அரசுத் துறைகள், அமைப்புகள் தொடர்பாக  பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக, ‘சிபிகிராம்ஸ்’ என்ற ஆன்லைன் இணையதளம் செயல்படுகிறது. இதில், பொதுமக்களின் தேவைகளை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து ஒன்றிய அரசின் நிர்வாக சீர்திருத்த துறை மற்றும் பொதுமக்கள் குறைகேட்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்கள் தெரிவிக்கும் புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தற்போது 45 நாட்கள் கால  அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அவகாசம் 30 நாட்களாக  குறைக்கப்படுகிறது. மேல் முறையீடு செய்யப்படாமல் இருந்தால் அந்த புகார் தொடர்பான விசாரணை முடித்து வைக்கப்பட்டதாக கருதப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.