வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ‘சிகரெட் உள்ளிட்ட அனைத்து விதமான புகையிலை பொருட்கள் உள்ள பாக்கெட்டுகளிலும், டிச., 1ம் தேதிக்குப் பின் புதிய எச்சரிக்கை புகைப்படம் மற்றும் வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களுக்கான விதிகளில், மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இது, 2022 டிச., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இதன்படி, உள்நாட்டில் தயாரிக்கப்படும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளில், ‘புகையிலை வலி மிகுந்த மரணத்தை ஏற்படுத்தும்’ என்ற வாசகமும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்த புதிய எச்சரிக்கை புகைப்படமும் இடம்பெற வேண்டும்.
இவை, 2022 டிச., 1ல் துவங்கி ஒரு ஆண்டுக்கு இடம்பெற வேண்டும். அடுத்து, 2023 டிச., 1ம் தேதிக்கு பின், ‘புகையிலை பயன்படுத்துவோர் இளமையிலேயே உயிரிழப்பர்’ என்ற வாசகமும், புதிய எச்சரிக்கை புகைப்படமும் இடம்பெற வேண்டும். இந்த விதிகள் புகையிலை பொருட்கள் தயாரிப்பில் நேரடியாகவோ, மறைமுகமாகவே ஈடுபட்டுள்ளோர்,
வினியோகிப்போர், இறக்குமதி செய்வோருக்கு பொருந்தும். மீறினால், சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement