கணவருடன் வசித்த வீட்டை அதிக விலைக்கு வாங்கிய சமந்தா

தென்னிந்தியத் திரையுலகத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு விரைவில் பிரிந்த ஜோடியாக சமந்தா, நாக சைதன்யா ஜோடி இருக்கிறது. இருவரும் பிரிந்தாலும் அவர்களைப் பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு புதிய செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்படி ஒரு புதிய செய்தி மீண்டும் வெளிவந்துள்ளது. சமந்தா, நாக சைதன்யா இருவரும் திருமணம் செய்து கொண்ட பின்னர் ஐதராபாத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்றை வாங்கி அங்கு வசித்து வந்துள்ளனர். பின்னர் தனி வீடு ஒன்றை வாங்கியதும் அந்த அடுக்கு மாடி குடியிருப்பை விற்றுவிட்டனர். இருவரும் பிரிந்த பின் ஐதராபாத்தில் சமந்தா வசிக்க சரியான வீடு அமையவில்லையாம்.

இந்நிலையில் திருமணம் முடிந்து வசித்து வந்த அந்த அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டை வாங்க சமந்தா முயற்சித்துள்ளார். ஆனால், அதற்குள்ள அந்த வீடு வேறொருவருக்கு விற்கப்பட்டுள்ளது. அதன்பின் அந்த வீட்டை வாங்கியவரை எப்படியோ சமாதானம் செய்து அதை வாங்கிக் கொடுத்திருக்கிறார் தெலுங்கு நடிகரான முரளி மோகன். அதற்காக கூடுதல் விலையைக் கொடுத்திருக்கிறார்கள். தற்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் சமந்தாவும், அவரது அம்மாவும் தங்கியுள்ளார்களாம். இந்தத் தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் முரளி மோகன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.