நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நாளை மறுநாள் முதல் தொடர்கிறது. 2023 மார்ச் 31ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளனர். சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையிலும், மாவட்டங்களில் தலைமை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமைகளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.