“என்கவுன்டர்; உ.பி-க்கு ஐந்து படிகள் மேலே செல்வோம்” – கர்நாடக அமைச்சர் பேச்சு

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜ.க யுவமோர்ச்சா மாவட்டச் செயலாளராக இருந்த பிரவீன் நெட்டாரு கடந்த 26-ம் தேதி கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏடிஜிபி அலோக் குமார் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஊடகவியலாளர்களிடம், “யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தில் பயன்படுத்தும் மாதிரியை வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தத் தயார்” எனத் தெரிவித்திருந்தது சர்ச்சையானது.

கொலைசெய்யப்பட்ட பிரவீன் நெட்டாரு

இந்த நிலையில், கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் செய்தியாளர்களிடம், “யோகி ஆதித்யநாத் மாதிரியை வகுப்பு சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்போவதாக முதல்வர் கூறியிருக்கிறார். நாம் ஏன் உத்தரப் பிரதேசத்தை மாதிரியாக கருத வேண்டும். அதைவிட ஐந்து படிகள் மேலே செல்வோம். குற்றம் சாட்டப்பட்டவர்களை என்கவுன்டர் செய்யுங்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்பதே மக்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தின்படியே நடவடிக்கை இருக்கும். உ.பி.யை விட சிறந்த மாதிரியைத் தருவோம். கர்நாடகா முற்போக்கான மாநிலம், முன்மாதிரி மாநிலம், எனவே நாம் யாரையும் பின்பற்றத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பசவராஜ் பொம்மை

ஏற்கெனவே, யோகி மாதிரி என்பது குற்றம்சாட்டப்பட்ட சிறுபான்மையினர்களுக்குச் சிறைச்சாலை அல்லது புல்டோசர்களைப் பயன்படுத்தி அவர்களின் வீடுகளை இடிப்பது போன்ற கடுமையான நடவடிக்கையை விவரிக்கிறது என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் குற்றவாளிகளை என்கவுன்டர் செய்யக் கூறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.