கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக, ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை’ என்கிற பெயரில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அன்னூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வட மாநில இளைஞர்கள் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் போலீஸார் கணேசபுரம் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வட மாநில இளைஞர் ஒருவர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரபீன்ந்தர பரிடா என்பது தெரியவந்தது.
கடந்த ஏழு ஆண்டுகளாக அதே பகுதியில் தங்கி ஓர் தனியார் ஆலையில் பணியாற்றி வருகிறார். ஆனால் அந்த நிறுவனத்தில் சரியாக வேலை இல்லாததால் வருமானத்துக்கு மாற்றுவழியை யோசித்துள்ளார்.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் தங்கி இருக்கும் குடியிருப்புக்கு அருகே கஞ்சா விதைகளை தூவி கஞ்சா செடியை வளர்த்தியுள்ளார். போலீஸ் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது,
அங்கு சுமார் மூன்று மாதங்களாக கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவது தெரிய வந்தது. கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீஸார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.