‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படம் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். அதிலும் குறிப்பாக ஜாக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரம் அனைவருக்கும் ஃபேவரைட். அந்தக் கதாபாத்திரம் அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.
ஜானி டெப் 1983-ம் ஆண்டு அன்னி அல்லிசன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் இரண்டு ஆண்டுகள் கூட அந்தத் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. பின் அக்வாமேன், தி ரம் டைரி, தி டேனிஷ் கேர்ள் போன்ற படங்களில் நடித்த ஆம்பர் ஹெர்ட் என்பவரைக் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஜானி டெப், 2017-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகையான ஆம்பர் ஹெர்ட் தன்னை ஜானி டெப் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார் என்று கடந்த சில வருடங்களாக அவர் மீது வழக்கு நடத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஜானி டெப் ஆம்பர் ஹெட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றத்தில் இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர். ஜூன் மாதம் நடந்த 3 வழக்குகளில் இரண்டு வழக்குகளில் ஜானி டெப்புக்குச் சாதகமாகவே தீர்ப்புகள் வந்தன.
ஜானி டெப் இந்த வழக்குகளில் வெற்றி பெற்றதால் அம்பர் ஹெர்டுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்குகள் முடிவுக்கு வந்தாலும், அந்த வழக்கு விசாரணையின் போது வெளியான சில சாட்சிகள் தற்போது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அப்படி அந்த விசாரணையின் போது சாட்சி அளித்த ஜானி டெப்பின் முன்னாள் காதலியும், அமெரிக்க நடிகையுமான எலென் பார்க்கின் பேசிய விஷயங்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன.
முதன்முதலாக ஜானி டெப்பும் தானும் நெருக்கமாக இருந்தபோது, க்வாலூட் என்ற போதை மருந்தை தனக்குக் கொடுத்ததாகத் தெரிவித்திருக்கிறார் எலென். மேலும் “ஜானி டெப் வன்முறை உலகத்தால் சூழ்ந்துள்ளார். பொதுவாகவே மோசமான வார்த்தைகளால் திட்டக்கூடியவர்தான் ஜானி டெப். எந்நேரமும் குடித்துக் கொண்டேதான் இருப்பார். அதுமட்டுமின்றி கஞ்சா மற்றும் போதைப் பொருள்களுக்கு டெப் அடிமையாகி இருந்தார்” என்று எலென் பார்க்கின் தெரிவித்துள்ளார்.
ஜானி டெப் பற்றி எலென் பார்க்கின் கூறியது தற்போது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.