பெங்களூருவில் உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளிக்கு ஆதரவு – வாடிக்கையாளர் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு வைரல்

பெங்களூரு: பெங்களூருவில் மாற்றுத்திறனாளி ஒருவர் கடும் மழையிலும் உணவு டெலிவரி செய்வது தொடர்பான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவருக்கு பலரும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசிக்கும் ரோஹித் குமார் சிங் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது செல்போன் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்தேன். ஆனால் உணவு வருவதற்கு கால தாமதம் ஆனதால் டெலிவரி செய்பவருக்கு போன் செய்தேன். 10 நிமிடங்களில் வந்து விடுவதாக கூறியவர், சற்று தாமதமாக வந்தார். கோபத்தில் கதவை திறந்த எனக்கு, பேரதிர்ச்சி காத்திருந்தது. மழையில் நனைந்து, ஊன்றுகோல் உதவியுடன் நின்று கொண்டிருந்தார் அந்த டெலிவரி நபர். அவரைப் பார்த்ததும் எனது கோபம் எல்லாம் போய் விட்டது. அவரிடம் உணவைப் பெற்று கொண்டே பேச்சுக் கொடுத்தேன். அவரைப் பற்றி விசாரித்தேன்.

அந்த மாற்றுதிறனாளியின் பெயர் கிருஷ்ணப்பா ரத்தோட். 40 வயதை கடந்த அவருக்கு 3 பிள்ளைகள். கரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை இழந்த அவர், தற்போது உணவு டெலிவரி செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். மழையிலும் வெயிலிலும் போக்குவரத்து நெரிசலிலும் ஓடிக்கொண்டே இருக்கிறார். அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓயாமல் உணவு டெலிவரி செய்தால் தான் ஓரளவுக்கு பணம் சம்பாதிக்க முடிவதாக அவர் கூறினார். அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்த போதே அடுத்த ஆர்டர் வந்துவிட்டதால், எனது நன்றியை எதிர்பார்க்காமல் மழையிலே வண்டியை கிளப்பினார்” என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, ஏராளமானோர் கிருஷ்ணப்பா ரத்தோடுவுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளனர். 3 பேர் அவருக்கு தங்களது நிறுவனத்தில் வேலை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அவருடைய உழைப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.