மைசூரு தசரா யானைகளை கண்காணிக்க 14 இடங்களில் கேமராக்கள் பொருத்தம்

மைசூரு:

14 கண்காணிப்பு கேமராக்கள்…

மைசூரு தசரா விழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 26-ந் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 5-ந் தேதி தசரா விழா நிறைவு பெறுகிறது. இதற்கிடையில் யானைகள் ஊர்வலம், தங்க அம்பாரி ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த யானைகள் ஊர்வலத்திற்காக துபாரே, மத்திகோடு, ராம்புரா முகாம்களில் இருந்து 14 யானைகள் மைசூருவிற்கு அழைத்து வரப்பட்டது.

இந்த யானைகள் அனைத்தும் மைசூரு அரமணையில் உள்ள தனி முகாமில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யானைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், சுற்றுலா பயணிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அதாவது அரண்மனை நுழைவாயிலில் இருந்து யானைகள் அடைக்கப்பட்டுள்ள முகாம் வரை 14 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி அதிகாரிகள் யானைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

உற்சாக குளியல்

யானைகளுக்கு சமைப்பதற்கு முகாமை ஒட்டியே தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. பாகன்கள்தான் அந்த யானைகளுக்கு உணவு அளிக்கவேண்டும். வேறுயாரும் வழங்க கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல யானைகளை பாகனங்கள் உற்சாகமாக குளிப்பாட்டினர். முன்னதாக காலை 6 மணிக்கு வழக்கம்போல யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டது. 9 மணிக்கு இந்த நடைபயிற்சி முடிந்தது. பின்னர் மாலை 4 மணிக்கு ஆரம்பித்த நடைபயிற்சி இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. இந்த நடைபயிற்சி மைசூரு அரண்மனையில் இருந்து பன்னிமண்டபம் அருகே உள்ள தசரா தீப்பந்து விளையாட்டு மைதானம் வரையும், பின்னர் அங்கிருந்து மைசூரு அரண்மனை வரையும் என 10 கிலோ மீட்டர் தூரம் இந்த நடைபயிற்சி நடந்தது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் யானைகளை குளிப்பாட்டி ஓய்வு எடுக்க வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.