குழந்தை இறந்துவிட்டதாகக் கூறிய தந்தை – சந்தேகமடைந்த தாத்தா… அம்பலமானது குழந்தை விற்பனை

பிறந்த பெண் குழந்தையை வேறொருவருக்கு ரூ.6,000க்கு விற்ற தந்தை உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள கோஹ்பூர் மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி புதன்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக  அக்குழந்தையின் தந்தை குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவரது பேச்சில் சந்தேகமடைந்த குழந்தையின் தாத்தா போலீசில் புகார் அளித்துள்ளார்.

image
புகாரின் பேரில் கோஹ்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் திருப்பமாக குழந்தையின் தந்தையே குழந்தையை விற்றது தெரியவந்தது. லக்கிம்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் உபாத்யாய் என்பவரிடம் 6,000 ரூபாய்க்கு குழந்தையை விற்றது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து குழந்தையை பாதுகாப்பாக மீட்ட போலீசார் கடத்தல் தொடர்பாக குழந்தையின் தந்தை, கிருஷ்ண பிரசாத் உபாத்யாய் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”மீட்கப்பட்ட குழந்தை தாயாரிடம் ஒப்படைக்கப்படும். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”என்று கூறினார்.
 இதையும் படிக்க: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு – முக்கிய ஆவணங்கள் மாயம்; ஓய்வு வழக்கறிஞர் விளக்கம்

 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.