நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை: நாகை, காரைக்கால், தூத்துக்குடி வஉசி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் ஒடிசா மாநிலம் அருகேயுள்ள  சாகர் தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த  தாழ்வுநிலை மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்குவங்கம் மற்றும்  ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்து சென்று வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் தமிழக கடலோர பகுதிகளுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாகை துறைமுகத்தில் நேற்று மாலை  ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலையில் இன்றும்  2வது நாளாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல்  காரைக்கால் துறைமுகத்தில் இன்று 2வது நாளாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை  கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதேபோல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் கப்பல்கள் எச்சரிக்கையுடன் கடல் பயணத்தை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் தென்மேற்கு வங்கக்கடல், தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.