மருந்துகளை போதைக்கு பயன்படுத்துவது தீவிர குற்றம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!

புதுக்கோட்டையைச் சேர்ந்த அண்ணாதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “புதுக்கோட்டையில் நகர் பகுதியில் சொந்தமாக மெடிக்கல் வைத்து நடத்தி வருகின்றேன். என் மீது போதை ஊசி விற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரர் அண்ணாதுரை மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் போதை தரக்கூடிய மருந்துகளை ஊசி மூலம் செலுத்தப்பட்டு வந்ததாக இந்த வழக்கில் ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவத் துறையில் மிகவும் அரிதாக பயன்படுத்தக்கூடிய சில மருந்துகளை சட்டவிரோதமாக போதைக்காக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இது மிகவும் கொடூரமான குற்றமாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசு தற்போது இதுபோன்று போதை மருந்துகளை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் சிலர் ஆன்லைன் மூலமாக வாங்கி இதனை பயன்படுத்துகின்றனர். இந்த மருந்துகளை தொடர்ந்து எடுத்தால் உயிருக்கு ஆபத்தாக முடியும். மொத்த சமூகமும் பாதிக்கக்கூடும். எனவே மருந்து எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து மனுதாரரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியது போல் அரிதாக பயன்படுத்த கூடிய மருந்துகளை போதைக்காக உபயோகப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது. இதனை தீவிர குற்றமாக நீதிமன்றம் கருதுகிறது. இது போன்ற வழக்கில் காவல்துறை விசாரணை தேவைப்படுவதால் முன்ஜாமின் வழங்க முடியாது என கூறி மனுதாரரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.