புதுடெல்லி: அரசியல் சவால்களை எதிர்கொள்ளவும், 2024 மக்களவை தேர்தலை குறிவைத்தும், பல்ேவறு மாநில தலைவர்களை பாஜ மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகாரில் சமீபத்தில் பாஜ உடனான கூட்டணியை கழற்றி விட்ட நிதிஷ் குமார், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கைகோர்த்து புதிய ஆட்சி அமைத்துள்ளார். இது போல், பல மாநிலங்களில் அரசியல் நிலவரங்கள் மாறிக் கொண்டுள்ளன. சில மாநிலங்களில் பாஜ.வின் கை ஓங்கினாலும், சில மாநிலங்களில் சறுக்கலை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், தற்போதைய அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும், 2024 மக்களவை தேர்தலை குறிவைத்தும், பல்வேறு மாநில தலைவர்களை அக்கட்சி மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களில் சில முக்கிய பொறுப்புகளை மாற்றியது. அதைத் தொடர்ந்து, உபி, பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கட்சிப் பொறுப்புகளில் அதிரடி மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உபி.யில் மாநில பாஜ தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், அது நிரப்பப்பட உள்ளது.
சமீபத்தில், பாஜ நாடாளுமன்றக் குழுவில் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான் நீக்கப்பட்டு, சமூக ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் முக்கியத்துவம் தரப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதே போல், மாநில பாஜ தலைவர்களையும் சமூக ரீதியாக அனைத்து சாதிகளுக்கும் சம அளவிலான பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.