ஊத்துக்குளி வெண்ணை தொழிலுக்கு வந்த சிக்கல்

உலக புகழ்பெற்று விளங்கும் ஊத்துக்குளி வெண்ணை உற்பத்திக்கு தேவையான எருமைப் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு வருவதால்,வெண்ணை உற்பத்தி தொழிலே அழிந்து வருவதாக ஊத்துக்குளி வெண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பாரம்பரியமான வெண்ணை உற்பத்திக்கு பெரும் பங்காற்றி வந்த எருமைகளை விவசாயிகள் வளர்ப்பதை குறைத்தும், வளர்க்கும் எருமைகளை விற்பது அதிகரித்து வருவதால், ஊத்துக்குளியின் பெயரை உலக புகழ்பெற வைக்க காரணமாக இருந்த எருமை வெண்ணை உற்பத்தி முழுவதுமாக அழியும் நிலையை எட்டி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் உற்பத்தியாகும் எருமை வெண்ணை உலக பிரசித்தி பெற்றதாகும்.மிகவும் வறட்சி பகுதியாகவும், வெண்ணை உற்பத்திக்கு ஏற்ற கால நிலையும் நிலவுவதாலும், மானாவாரி நிலங்கள் அதிகம் இருப்பதால் ஊத்துக்குளி பகுதியில் இருக்கும் விவசாயிகள் வளர்க்கும் எருமை பாலில் இருந்து வெண்ணை மற்றும் நெய் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் அனுப்ப பட்டு வருகிறது.மேலும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ரயில் மூலம் தினமும் தயிரும், வெண்னையும் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில்,ஊத்துக்குளியில் பாரம் பரியமாக வெண்ணை உற்பத்தியில் சிறிய அளவில் ஈடுபடும் தனியார் உற்பத்தியாளர்கள் விவசாயிகளிடம் இருந்து உற்பத்தியாகும் சுமார் 25 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து,பாலை அரைத்து க்ரீம் எடுத்து அதனை வெண்ணையாக உற்பத்தி செய்து வருகின்றனர்.இங்கு மாடுகள் மற்றும் எருமைகள் உள்ள நிலையில்,வறட்சி பகுதியாகவும் உள்ளதால்,விவசாயிகள் சோளத்தட்டு,கடலை செடி உள்ளிட்ட உலர் தீவனங்களை கால்நடைகளுக்கு அளித்து கிடைக்கும் பாலில் இருந்து தயார் செய்யப்படும் எருமை வெண்ணையில் கொழுப்பு, புரோட்டீன் சதவீதம் அதிக அளவில் இருப்பதும்,இப்பகுதியில் நிலவும் உகந்த காலநிலை காரணமாக உற்பத்தியாகும் ஊத்துக்குளி வெண்ணை,நீண்ட நாட்கள் கெடாமல் தரமானதாக இருப்பதால் பொது மக்கள் அதிகம் தேடி வந்து வாங்கி செல்லும் பொருளாக இருந்தது, தற்போது எருமைகள் எண்ணிக்கை திடீரென குறைந்து வருவதால், எருமை வெண்ணை உற்பத்தி செய்யும் தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஊத்துக்குளி வெண்ணை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். 

எருமைகள் எண்ணிக்கை இப்பகுதியில் கடந்த இரு ஆண்டுகளில் குறைய காரணமாக இருப்பது,கடந்த 5 ஆண்டுகளாக கால்நடை தீவனம்,பால் உற்பத்திக்கு பெரிதும் பயன்படும் பருத்திக் கொட்டை,பிண்ணாக்கு,தவிடு ஆகியன அபரிமிதமாக விலையேற்றம் கண்டு வருகிறது.அதிக விலை கொடுத்து தீவனங்களை வாங்கி உற்பத்தி செய்த பாலுக்கு உரிய விலை அரசு மற்றும் தனியாரிடம் கிடைக்காததன் காரணமாக தங்களிடம் உள்ள கறவைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளனர். 

 இந்நிலையி தற்போது வரை குறைந்த அளவில் உற்பத்தியாகும் எருமைப் பாலை தேனீர் கடைகளுக்கும்,வீடுகளுக்கும் அதிகம் கொடுத்து வருவதால்,ஊத்துக்குளி வெண்ணை உற்பத்தி யாளர்களுக்கு வெண்ணை உற்பத்திக்கு தேவையான பால் கிடைக்காமல் எருமை வெண்ணை உற்பத்தி சரிவை சந்தித்து அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும்,தற்போது எருமைகள் இருந்த இடத்தினை செம்மறி ஆடுகள் பிடித்து விட்டன.எருமைகள் வளர்த்து பால் உற்பத்தி செய்து வந்த விவசாயிகள் பலரும் அவற்றை விற்று விட்டு,குறைந்த தீவன செலவு ஆகும் செம்மறி ஆடு வளர்ப்பில் இறங்கி விட்டனர்.இதற்கு ஏற்றார் போல அவர்களது மானாவாரி நிலமும் அமைந்து ள்ளதால்,தோட்டங்களை சுற்றி கம்பி வேலி அமைத்து ஆடு வளர்ப்பில் மும்முரமாக இறங்கி விட்டனர்.இதன் காரணமாக உலக புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணை உற்பத்தி வேக வேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில்,சில வெண்ணை உற்பத்தியாளர்கள் பசு வெண்ணை உற்பத்திக்கு சத்தமில்லாமல் மாறி விட்டனர்.இந்நிலையில் தற்போதைய சூழலில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சிலர் மட்டும் பாரம்பரிய எருமை வெண்ணை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து வெண்ணை உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பொன்னுசாமி கூறுகையில்,கடந்த 40 வருடமாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போதைய நிலை போல் முன்னெப் போதும் இருந்த தில்லை,உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதால் பால் உற்பத்தியை விவசாயிகள் குறைத்து வருகின்றனர்.மேலும் இரண்டு எருமைகள் இருந்தால் அதனை கவனிக்க ஒரு ஆள் நாள் முழுவதும் வேலை பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது.அதற்கான வருவாய் குறைவாக இருப்பதால் பலரும் எருமைகளை விற்று விட்டு திருப்பூர் கம்பனிகளுக்கு வேலைக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.காலையில் வீட்டின் அருகில் வண்டிகள் வந்து ஏற்றி சென்று மாலையில் கொண்டு வந்து விட்டு செல்வதால் வாரம் சுமார் 2 ஆயிரம் வரை வருகிறது. ஆனால் எருமைகளை வைத்து பால் உற்பத்தி செய்து விற்பனை செய்கையில் இந்த வருமானம் கிடைப்ப தில்லை.இதனால் வருங்கால சந்ததி இத்தொழிலை செய்ய முன் வராததால் வெண்ணை உற்பத்தி தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறினார்.

மற்றொரு வெண்ணை உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில், ஒரு எருமை தினத்துக்கு மூன்று முதல் 5 லிட்டர் பால்தான் கொடுக்கும், அதுவே ஜெர்சி பசு 10 லிட்டர் வரை கொடுப்பதால் விவசாயிகள் எருமையை விற்று விட்டு பாசு மாடுகளுக்கு மாறி விட்டனர்.எருமை பால் உற்பத்தி செய்வதில் அதிக செலவினம் ஆவதால் விவசாயிகளின் இந்த மாற்றத்தால் புகழ் பெற்ற ஊத்துக்குளி எருமை வெண்ணை இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் உற்பத்தி செய்வது முழுமையாக நின்று அழிந்து விடும். தற்போது எருமை பால் வீடுகளுக்கு ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுவதாலும்,டீ கடைகளுக்கு அதிகம் வாங்கி செல்வதாலும் தங்களுக்கு எருமைப்பால் கிடைக்காமல் வெண்ணை உற்பத்தி குறைந்துள்ளதாகவும்,வரும் காலத்தில் இந்தியா முழுவதும் பசுமாட்டு வெண்ணை மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்படலாம் என்றார்.

தரத்திலும் சுவையிலும் மற்ற ஊர் வெண்ணைகள், ஊத்துக்குளி வெண்ணை அருகிலே கூட நெருங்க முடியாத நிலை, இத்தனை ஆண்டு காலம் கோலேச்சி வந்த ஊத்துக்குளி வெண்ணை தொழில் மூடு விழாவை நோக்கி செல்வதாக அதன் உற்பத்தியில் உள்ளவர்களே மன வருத்தத்துடன் கூறி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.