பி.கே போடும் தூள் ப்ளான்; தூக்கம் இழந்து தவிக்கும் பாஜக!

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில் முதலமைச்சர் நிதீஷ்குமாருக்கும், பாஜக மேலிடத்துக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி நிதீஷ் குமாரின் ஐக்கிய தனதா தளம் கட்சியை உடைக்க பாஜக ரகசிய ப்ளானில் இறங்கியது. இதை அறிந்து டென்ஷன் ஆன நிதீஷ் குமார் பாஜகவுடன் கூட்டணியை முறிப்பதாக அறிவித்தார்.

அப்போது ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியதால் தான் உறவை முறிப்பதற்கான காரணம் என, நிதீஷ் குமார் அறிவித்தது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல் சில மணி நேரங்களில் பாஜகவின் எதிரியாக பார்க்கப்படும் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சியுடன் நிதீஷ் குமார் கூட்டணி அமைத்தார்.

இதன் தொடர்ச்சியாக நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆனதோடு தேஜஸ்வி யாதவ்வுக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்தது பாஜகவை ரொம்பவே கோபம் அடைய செய்தது.

நட்பு பாராட்டுவது போல் பழகி, தன்னிடமே வேலை காட்ட முயன்ற பாஜகவுக்கு நிதீஷ் குமார் பாடம் புகட்டி உள்ள நிலையில், அடுத்தகட்ட அரசியல் நகர்வு பற்றி எதிர்பார்ப்பு பெரிதும் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆளும் மகாகட்பந்தன் கூட்டணியில் உள்ள கட்சியின் எம்எல்ஏக்களுக்கு பாஜக வலை விரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ஆட்சி கவிழும் அபாயம் உள்ளதாக பரவலாக பேச்சு எழுந்தது.

இந்நிலையில் பழிவாங்க துடிக்கும் பாஜகவின் விஷ பல்லை பிடுங்க முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து மெகா திட்டம் ஒன்றை தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வெளியிட்டு இருக்கும் தகவல் பாஜகவின் தூக்கத்தை கெடுத்து இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதாவது, பீகாரில் அடுத்த சட்டபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் வரும் ஆண்டுகளில் 5 முதல் 10 லட்சம் பேருக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம் என கடந்த சுதந்திர தின விழாவின்போது முதல்வர் நிதிஷ்குமார் கூறி இருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தபடி வரும் 2 ஆண்டுகளில் 5 லட்சம் முதல் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கினால், தன்னுடைய ஜன் சூரஜ் அபியான் பிரச்சாரத்தை வாபஸ் பெற்று, நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்க உள்ளதாக, கூறியது பீகார் அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.

நிதீஷ் குமாரை எந்த வகையில் பழிவாங்கலாம்? என்று பாஜக வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில் பிரசாந்த் கிஷோர் ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளதால் பாஜக நிர்வாகிகள் தூக்கம் இழந்து தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.