உள்நாட்டில் உருவான விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ராந்த் இன்று அர்ப்பணிப்பு: கொச்சி விழாவில் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான விக்ராந்தை, பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நாட்டிலேயே முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த். கடற்படையின் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகமும், கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து இதை உருவாக்கி உள்ளன. நாட்டிலேயே இதுவரை கட்டப்பட்ட போர்க்கப்பல்களிலேயே மிகப் பெரியது இதுதான். ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல், கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் முக்கிய பங்கு வகித்தது. அதை நினைவுகூரும் வகையில், இந்த கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட்டுள்ளது. விக்ராந்த் இன்று கடற்படையில் இணைக்கப்படுகிறது. கொச்சியில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, இதை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது தொடர்பாக கடற்படை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ராந்த், கடற்படையில் சேர்ப்பதற்கான நேர எண்ணிக்கை தொடங்கியது. நாட்டிற்கும், இந்திய கடற்படைக்கும் இது மிகவும் முக்கியமான நாள். நமது நாட்டின் பெருமை,’ என்று  கூறியுள்ளது.  

* கடற்படைக்கு புதிய கொடி
ஐஎன்எஸ் விக்ராந்த் தொடக்க விழாவின்போது இந்திய கடற்படைக்கான புதிய கொடியையும் (நிஷான்) பிரதமர் மோடி வெளியிடுகிறார். ஏற்கனவே இருந்த கடற்படையின் கொடியில் செயின்ட் ஜார்ஜ் சிலுவையுடன் மேற்புறத்தில் தேசியக்கொடியும் இடம் பெற்று இருக்கிறது. இந்நிலையில், இந்த செஞ்சிலுவை இல்லாமல் கடற்படைக்கான புதிய கொடி வெளியிடப்படுகிறது. இனிமேல், இந்திய கடற்படையின் அனைத்து கப்பல்களிலும், தளங்களிலும் இந்த கொடியே பயன்படுத்தப்படும். இந்திய கடற்படைக்கான கொடி, இதற்கு முன் 4 முறை மாற்றப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.