”மத சடங்குகள் செய்யக்கூடாது”.. 10 கட்டளைகளாக மரண சாசனம் எழுதி வைத்த விருதுநகர் எழுத்தாளர்!

தன் உடலுக்கு மத சடங்குகள் செய்யக்கூடாது என்றும் ஆராய்ச்சிக்கு உடலை ஒப்படைக்க வேண்டும் என மரணிக்கும் முன்பே மரண சாசனம் எழுதிய எழுத்தாளரது மகன்கள் அவரது இறுதி விருப்பப்படி மதுரை மருத்துவக்கல்லூரிக்கு உடலை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தார் வட்டம் வத்திராயிருப்பு கிராமத்தை சேர்ந்த எழுத்தாளர் சுந்தரமகாலிங்கம். இவருக்கு வயது 82. இவருக்கு அமர்ஜோதி என்ற மனைவியும் தீலிபன், கெளதம், கோபிநாத் என மூன்று மகன்களும் உள்ளனர். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும், வரலாற்றுத்துறையில் ஓய்வுபெற்ற ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர்.
image
தனது சிந்தனையில் தோன்றிய பல்வேறு கருத்துகளைப் புத்தகங்களாக எழுதியுள்ளார் சுந்தரமகாலிங்கம்.. குருஜி என்ற சிறுகதை புத்தகத்தையும், துரோகம் வெட்கம் அறியாது, காலத்தை அறிந்தால், ஆண்டுகள் பல கழிந்ததால் என்ற புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார். மேலும் ஜனசக்தி, தீக்கதிர், உயிரெழுத்து உள்ளிட்ட பத்திரிக்கைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
image
இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக சுந்தரமகாலிங்கம் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 30ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் எழுத்தாளரான அவர் தான் இறந்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என ஒரு மரண சாசனைத்தை குடும்பத்தினருக்கே தெரியாமல் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது.
image
எழுத்தாளர் சுந்தரமகாலிங்கம் தன் இறப்பிற்குப் பிறகு தன் மகன்கள், நண்பர்கள் என்னென்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பவற்றைப் பட்டியலிட்டு 10 கட்டளைகளாக மரண சாசனம் எழுதி வைத்திருந்தார். தனது உடலுக்கு எந்த மத சடங்குகளையும் செய்யக்கூடாது, தனது கண்களை தானமாக கொடுக்க வேண்டும். தனது உடலை ஆராய்ச்சிக்கு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டளைகள் அந்த மரண சாசனத்தில் இடம்பெற்றிருந்தன.
image
image
அவரின் அந்த மரண சாசனத்தின் படியும், இறுதி விருப்பத்தின் படி அந்த கட்டளைகளை அவரது மகன்களும், குடும்பத்தினரும் நிறைவேற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் கடைசி ஆசையாக எழுதி வைத்த அந்த மரண சாசனத்தின் படியே அனைத்து மரியாதைகளும் செய்யப்பட்டுள்ளன. அவருடைய கண்கள், கண் மருத்துவமனைக்கும், உடல் மதுரை மருத்துவக்கல்லூரி மெய்யியல் கழக ஆய்வுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.