தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்வதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் இன்று (செப்.6) காலை நீர் வரத்து 1.36 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடகா மாநிலத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, தமிழகத்தை நோக்கி காவிரியாற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் நேற்று(5-ம் தேதி) காலை நிலவரப்படி விநாடிக்கு 43 ஆயிரம் கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து, நேற்று மாலை 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரித்து இன்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.ஒகேனக்கல் காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.