கமல் பின்னணி குரல் கொடுக்க ‛பொன்னியின் செல்வன்' டிரைலர் வெளியீடு : மிரட்டும் பிரமாண்டம்

கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயற்சித்த நிலையில் அது நடக்கவில்லை. தற்போது மணிரத்னம் அதை படமாக எடுத்து சாதித்து விட்டார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல்பாகம் செப்., 30ல் வெளியாக உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயசித்ரா, பிரகாஜ்ராஜ், சோபிதா துலிபாலா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இன்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாய் நடந்தது. படத்தின் டிரைலரை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து வெளியிட்டனர். 3.23 நிமிட ஓடக் கூடிய இந்த டிரைலருக்கு கமல்ஹாசன் முன்னுரை வழங்கி குரல் கொடுத்துள்ளார்.

‛‛ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ நாடு தன் பொற்காலத்தை அடைவதற்கு முன் வானில் ஒரு பெரும் வாள் விண்மீன் தோன்றியது…'' என்ற கமலின் கனீர் குரலில் டிரைலரில் துவங்குகிறது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க நடக்கும் போட்டி, பகை, வஞ்சம், சூழச்சி என கதையோட்டம் இருக்கும்படியாக இந்த டிலைர் அமைந்துள்ளது. அதோடு டிரைலரில் காட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட அரண்மனைகள், போர்க்கள காட்சிகள், கடற்படை சண்டைக்காட்சிகள், அற்புதமான காட்சி அமைப்பு, பின்னணி இசை என பக்காவாக இந்த டிரைலரில் பொருந்தி போய் உள்ளது. நிச்சயம் பாகுபலி படத்திற்கு குறையாத பிரமாண்டம் இந்த படத்தில் இருக்கும் என டிரைலரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.

டிரைலரில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட படத்தில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் தோன்றும்படி உருவாக்கி உள்ளனர். டிரைலர் வெளியான அரைமணிநேரத்தில் 5.75 லட்சத்திற்கும் அதிகமான பேர் டிரைலரை பார்த்து ரசித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.