கோயிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நடிகை அலியா பட்டுக்கு கருப்பு கொடி: ஏமாற்றத்துடன் திரும்பினார்; போலீஸ் தடியடி

உஜ்ஜயினி: உஜ்ஜயினி கோயிலுக்கு தரிசனம் செய்ய திட்டமிருந்த நடிகை அலியா பட்டுக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதால், அவர் ஏமாற்றத்துடன் சுவாமி தரிசனம் செய்யாமல் கணவருடன் திரும்பினார். பாலிவுட்  நடிகர் ரன்பீர் கபூர், அவரது மனைவியும் நடிகையுமான அலியா பட் மற்றும் பிரம்மாஸ்திரா திரைப்பட இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் உள்ள புகழ்பெற்ற ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க திட்டமிட்டு இருந்தனர்.

இதுதொடர்பாக கர்ப்பிணியான அலியா பட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ஹலோ நாங்கள் உஜ்ஜயினி மகாகாலேஷ்வர் கோயிலுக்கு செல்கிறோம்’ என்று பதிவிட்டிருந்தார். இதையறிந்த விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் சிலர் உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயில் வளாகத்தில் குவிந்தனர். அவர்கள் கோயிலின் பிரதான வாயில் மற்றும் வி.வி.ஐ.பி.க்களுக்கான நுழைவு வாயிலில் கருப்புக் கொடியை கையில் வைத்துக் கொண்டு ஒன்றாக கூடினர்.

அப்பகுதியில் திடீரென பதற்றம் நிலவியதால், கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தினர். தகவலறிந்த அலியா பட், தனது கணவர் ரன்பீர் கபூர், தயாரிப்பாளர் அயன் முகர்ஜி ஆகியோருடன் உஜ்ஜயினி மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் செல்லாமல், இந்தூர் திரும்பினர். பின்னர் இந்தூரில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் சென்றனர்.

இதுகுறித்து உஜ்ஜயினி கலெக்டர் ஆஷிஷ் சிங், ‘மகாகாலேஷ்வர் கோயில் வளாகத்தில் நிலைமை கட்டுக்குள் வந்த பின்னர், அயன் முகர்ஜி மட்டும் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்’ என்றார். கோயிலுக்கு தரிசனம் செய்ய திட்டமிட்ட அலியா பட்டுக்கு கருப்பு கொடி காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.