தமிழகத்தில் விரிவான நிலையில் மருத்துவ பணி ..! – தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த புதுவை முதல்வர் ரங்கசாமி..!

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய புதுவை முதல்வர் ரங்கசாமி “ தமிழகத்தில் விரிவான நிலையில் மருத்துவ பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத், செந்தில் குமார், ரமேஷ், புதுச்சேரி மற்றும் தமிழக மருத்துவர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, உயிரை காக்கும் பணியில் அலட்சியம் காட்டாமல் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தமிழகத்தில் விரிவான நிலையில் மருத்துவ பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏராளமான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

மேலும், புதுச்சேரியில் மிகவும் சிரமப்பட்டு தான் அரசு மருத்துவ கல்லூரியை துவங்கினேன். இதனை ஜிப்மரை விட சிறந்த மருத்துவ கல்லூரியாகவும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ கல்லூரியாக கொண்டுவர வேண்டும் என்பேன். இடையில் தொய்வு இருந்தாலும் தற்போது சிறந்த மருத்துவ கல்லூரியாக இது வந்து கொண்டிருக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் சுகாதாரத்துறைக்கு 9.5 சதவீத நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளோம். அதேபோல் தமிழகத்திலும் அதிக நிதியை ஒதுக்கி நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தமிழகமும், புதுவையும் வேறல்ல இரண்டு மாநிலங்களும் இணைந்த ஒன்று தான்” என்று புதுவை முதல்வர் ரங்கசாமி பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.