இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல்லடக்கம்!

லண்டன்: மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு மிகவும் பிடித்த அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்குதான் இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராணியின் கணவர் பிலிப் உடல் கடந்த 2021-இல் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உடல் நலக்குறைவால் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மறைந்த ராணிக்கு, இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் இருந்து பீரங்கி வண்டியில் ஏற்றிக் கொண்டு வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு கொண்டு வரப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது சகோதரர்கள், சகோதரி, மகன்கள் ஆகியோர் ராணுவ வீரர்களுடன் அணிவகுத்துச் சென்றனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கு கூட்டத்தில், உலகம் முழுவதிலும் இருந்து அழைக்கப்பட்ட தலைவர்கள் சுமார் 2,000 பேர் கலந்து கொண்டனர்.

இறுதிச் சடங்கு முடிந்ததும் ராணியின் உடல் ஊர்வலமாக விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு அரச குடும்பத்தினர் மற்றும் ராணுவத்தினர் புடை சூழ எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. ராயல் வால்டுக்குள் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தார் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வில் அவரின் உடல், அவரது கணவரின் உடலுடன் வைக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.