பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத் உடல் நல்லடக்கம் – கண்ணீர் மல்க பிரியாவிடை!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், கணவர் பிலிப் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த 8 ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. இந்தத் தகவலை பக்கிங்ஹாம் அரண்மனையும் உறுதிப்படுத்தியது.

பிரிட்டன் வரலாற்றிலேயே அதிக காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். இவர், 10-க்கும் மேற்பட்ட பிரிட்டன் பிரதமர்களை பார்த்துள்ளார். இவரது மறைவு பிரிட்டன் நாட்டு மக்களை சோகக் கடலில் ஆழ்த்தி உள்ளது. இதைத் தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் அரசராக இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ் பதவி ஏற்றார். இவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார்.

ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை அடுத்து பிரிட்டன் நாட்டில் 11 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பால்மாரல் அரண்மனையில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ராணி எலிசபெத்தின் உடல் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இந்தியக் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ராணி எலிசபெத் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு: லண்டனில் குவிந்த உலகத் தலைவர்கள்!

இந்நிலையில் இன்று பிற்பகல் 3:30 மணி அளவில் (இந்திய நேரப்படி) பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் இறுதிச் சடங்கிற்காக, வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இருந்து வெளியே எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கில், பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் உள்ளிட்ட அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இருந்து வெலிங்டன் ஆர்ச் பகுதியை நோக்கி, ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான பொது மக்கள் நின்று ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து வின்ட்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு இறுதி பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர், பாரம்பரிய முறைப்படி, ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் உட்பட கோடிக்கணக்கான மக்கள், ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.