பராமரிப்பு பணிக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம் பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக லேசான காற்றுடன் கூடிய சாரல் மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்து வந்தது. குறிப்பாக, ஊட்டியில் எந்நேரமும் சாரல் மழை இருந்தது. இதனால், ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய மற்றும் சிறிய புல்மைதானங்கள் அனைத்தும் சேறும், சகதியுமாக மாறியது.

புல் மைதானங்கள் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இந்த புல் மைதானங்களுக்குள் சுற்றுலா பயணிகள் சென்றால், பூங்கா பழுதடைவது மட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் ஆடைகளும் சேறும், சகதியுமாக மாறி வந்தது. இதனால், புல் மைதானம் பராமரிப்பு பணிகளில் பூங்கா நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, பெரிய புல் மைதானத்தை பராமரிக்கும் பணியில் பூங்கா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, தற்போது பெரிய புல் மைதானம் மூடப்பட்டுள்ளது. பெரிய புல் மைதானத்திற்குள் செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக ஊட்டியில் மழை சற்று குறைந்து வெயில் அடிக்கிறது. இதனால், பெரிய புல் மைதானம் ஓரிரு நாட்களில் சீரமைத்த பின்னர், சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.