மதரஸாக்களில் ஆய்வு | உ.பி. முதல்வருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – முஸ்லிம்களுக்கு தாரூல் உலூம் வேண்டுகோள்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள மதரஸாக்களில் ஆய்வு நடத்த கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார். மதரஸாக்களின் வசதி, நிதி நிலை, மாணவர்களின் கல்வி நிலை, ஆசிரியர்களின் தகுதி, பாடப் பிரிவுகள் உள்ளிட்ட 11 முக்கிய விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தி அக்டோபர் 15-ம் தேதிக்குள் ஆய்வுகளை முடித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் மாநில அரசு கூறியது.

இதற்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுத்தீன் ஒவைஸி மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், தியோபந்த் நகரில் உள்ள புகழ்பெற்ற பழம்பெரும் மதரஸா தாரூல் உலூமில் நேற்றுமுன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், உ.பி.யின் 400 மதரஸாக்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தாரூல் உலூமின் மூத்த பேராசிரியரும் ஜமாயத்-எ-உலமா ஹிந்த் தலைவருமான மவுலானா சையது அர்ஷத் மதானி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின் மவுலானா கூறும்போது, ‘‘உ.பி. அரசு நடத்தும்ஆய்வுக்கு அனைத்து மதரஸாவினர் எதிர்ப்பு தெரிவிக்காமல் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட ஆய்வுகள் மீது எந்த புகார்களும் வராமையால் முஸ்லிம்கள் இதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஆய்வுக்கு பின் நிதி நிலையால் நிலவும் குறைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் அரசு அங்கீகாரம் பெற்ற சுமார் 16,500 மதரஸாக்கள் உள்ளன. அவற்றில், 558 மதரஸாக்கள் அரசு நிதியுதவி பெறுபவை. மேலும் 7,442 மதரஸாக்கள் இஸ்லாத்துடன் நவீன கல்வியையும் போதிக்கின்றன. தவிர அங்கீகாரம் பெறாத மதரஸாக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலை மோசமாக இருப்பதாக புகார்கள் உள்ளன.

உ.பி.யின் பெரும்பாலான முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை, பொதுக் கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்கு முன்னர் மதரஸாக்களில் சேர்த்து குர்ஆனை படிக்க வைக்கின்றனர். அந்த மதரஸாக்களால் அளிக்கப்படும் குறிப்பிட்ட பட்டங்களுக்கு ஏற்ற வகையில் அந்த மாணவர்கள், உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் சேர்ந்து உயர்க் கல்வி பெறும் வசதி உள்ளது.

இதுபோன்ற காரணங்களால் மதரஸாக்களில் ஆய்வு நடத்து வது அவசியம் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. அதற்கேற்ப ஆய்வு நடத்த தாரூல் உலூம் மதரஸா அளித்துள்ள ஆதரவு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது, ஏனெனில், சர்வதேச அளவில் முஸ்லிம்கள் இடையே இந்த மதரஸா நன்மதிப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.