ராகுல் யாத்திரை: 80 அடி நீள ஃபிளக்ஸில் சாவர்க்கர் படம் – காந்தி படம் கொண்டு மறைத்த காங்கிரஸார்

காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைபயணம் இப்போது கேரளா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று எர்ணாகுளம் மாவட்டத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். ராகுல் காந்தியின் நடைபயணத்தை வரவேற்கும் விதமாக நெடும்பாசேரி கோட்டாயி ஜங்சனில் 80 அடி நீளத்தில் பிளக்ஸ் ஒன்று வைக்கப்பட்டது. அதில் ரவீந்திரநாத் தாகூர், சந்திரசேகர ஆசாத், அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட தேச தலைவர்களின் படங்களின் வரிசையில் சாவர்க்கரின் படமும் இடம்பெற்றிருந்தது. வழக்கமாக ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க அமைப்பினர் மட்டுமே சாவர்க்கரை புகழ்ந்து கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் காங்கிரஸ் கட்சியினரும் சாவர்க்கரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டு போர்டு வைக்கபட்டதாக விவாதம் எழுந்தது.

விவாதத்துக்குப்பின் சாவர்க்கர் போட்டோ மறைக்கப்படுகிறது

அதிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ அன்வர் சதாத்தின் வீடு அமைந்துள்ள கோட்டாயி ஜங்சன் பகுதியில் அந்த ஃபிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது விவாதத்தை சூடாக்கியது. சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் சாவர்க்கர் படத்தின் மீது மகாத்மா காந்தி படத்தை ஒட்டினர். காங்கிரஸ் கட்சியினர் சாவர்கர் படத்தை மறைப்பதற்கு மட்டுமே காந்தி போட்டோவை பயன்படுத்தியதாக சி.பி.எம் கட்சியினர் கிண்டலடித்தனர். இதையடுத்து சாவர்க்கர் போட்டோ வைத்ததாக காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி செங்கமனாடு மண்டல தலைவர் சுரேஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து உள்ளூர் தலைவர்கள் சிலர் கூறுகையில், “உள்ளூர் அச்சகம் ஒன்றில், சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர்களின் புகைப்படங்களை அச்சடிக்கும் படி கூறியிருந்தோம். அச்சடித்ததும்… கவனிக்காமல் போஸ்டரை ஒட்டிவிட்டோம்”, என்று விளக்கம் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “சிபிஐ-எம் காங்கிரஸை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. டிசம்பர் மாதம் 1989-ஆம் ஆண்டு, வி.பி சிங்கை ஆதரித்து இந்துத்துவா அமைப்புகளுடன் கைகோர்த்திருந்தது அனைவரும் தெரிந்த உண்மையே”, என விமர்சித்துள்ளார்.

சாவர்க்கர் படத்தை மறைத்து காந்தி படம் வைக்கப்பட்டது

இதுபற்றி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுரேஷ் கூறும்போது, “நேற்று முன்தினம் இரவு 10-மணிக்குதான் ஃபிளக்ஸ் போர்டு வைக்கச்சொன்னார்கள். 80 அடி நீளமான பிளக்ஸ் போர்டின் புரூப் சரியாக பார்க்கமுடியவில்லை. நள்ளிரவு ஒரு மணிக்கு ஃபிளக்ஸ் கிடைத்ததும், வைத்துவிட்டோம். அன்வர் சதாத் எம்.எல்.ஏ அழைத்து சொன்னபோதுதான் சாவர்க்கர் போடோ இருந்தது எனக்கு தெரியவந்தது. ஒரு நிமிட கவனமின்மை யாத்திரையை விவாதமாக்கிவிட்டது. அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். நான் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக கட்சி என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.